ஏப் 18, 2015 : தமிழ்ப்பள்ளி வலைத்தளம் திறப்பு விழா

நம் தளம் (www.SBTamilSchool.org) தொடக்கவிழா இன்று குறித்த நேரத்தில் தொடங்கி இனிதே நடந்தது. முனைவர் திரு. கபிலன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, திரு. இராஜாமணி அவர்கள் நமது தளம் ஆரம்பித்ததின் நோக்கத்தை பற்றி வந்திருந்த அனைவரிடமும் விரிவாகப் பேசினார். பின்னர் திரு. சக்தி அவர்கள் தளத்தை தொடங்கி வைத்து, அனைவருக்கும் அதன் பயன்பாட்டினை விளக்கினார். தளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று அதன் தேவைகளையும், எதனால் குறிப்பிட்ட பகுதியை சேர்த்தோம் என்பதைப் பற்றியும் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். மேலும், நமது தளம் நம் அனைவரையும் இணைக்கும் பாலம் என்றும், இது சிறந்து விளங்க‌, பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் பங்கு எந்தளவிற்க்கு தேவை என்று தனது கருத்தினை வலியுறுத்தினார். திரு. இரவி அவர்கள் நமது பள்ளியின் முதல் செய்திமடல் பற்றி விவரித்தார். ஒவ்வொரு மாதமும் செய்திமடல் வெளியிட திட்டமிடப்பட்டதையும் விளக்கிக் கூறினார்.

திரு. முருகன் மற்றும் பெற்றோர்கள், தளம் சிறக்க தங்கள் கருத்தினை எடுத்துக் கூறினார்கள். குறிப்பாக, சமூக ஊடகங்களின் (Facebook, Twitter) தேவையை குறிப்பிட்டார்கள். அவற்றையெல்லாம் குறித்துக் கொண்ட திரு. சக்தி அவர்கள், விரைவில் நடைமுறைப் படுத்த ஆவண செய்வதாக உறுதி அளித்தார்கள். பின்னர் திரு. இராஜாமணி அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் இம்மாத 'தென்றல்' இதழை வழங்கினார்.

திரு. இரவி அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, விழா இனிதே முடிந்தது.